Tumgik
#புஜாங் பள்ளத்தாக்கு
iramuthusamy · 6 years
Text
பண்டைத்தமிழர் கடல்சார் வணிகம், ஸ்ரீவிஜய பேரரசின் கடல்சார் வணிக ஏகபோகம், கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு மேற்கொண்டு பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்ற செய்தி; மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கெடா துவா (Kedah Tua) என்னும் பகுதியில் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில், தழைத்தோங்கி பண்டைய நாகரிகம், கி.பி 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள், இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் பற்றியெல்லாம் முதல் பதிவில் கூறியிருந்தேன்.
கெடா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற லெம்பா புஜாங் (Lembah Bujang) பகுதி கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே விரைவான வளர்ச்சியை எவ்வாறு அடைந்தது? இப்பகுதி பாதுக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இது போன்ற கேள்விகளுக்கான விடை இந்த இரண்டாம் பதிவில் இடம்பெற்றுள்ளது. இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களாகிய சண்டிகளும் தொல்பொருட்களும் இங்கு கண்டறியப்பட்டன. இந்த நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் பற்றியும் இப்பதிவு விவரிக்கிறது.
இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம்
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
இத்தொடரின் இரண்டாம் பதிவு இதுவாகும்.
புஜங்கம் (भुजङ्ग) என்றால் சம்ஸ்கிருதத்தில் பாம்பு என்று பொருள் (எ.கா. புஜங்க சயனம்). புஜங்க என்ற சொல்லின் திரிபே “பூஜாங்” என்ற சொல் என்ற ஒரு கருத்து உள்ளது. இங்கு பாயும் மெர்போக்.ஆறு பாம்பைப்போல வளைந்து செல்வதால் புஜாங் என்ற பெயர் இடப்பட்டதாம். இந்தப் பள்ளத்தாக்கு மலாய் மொழியில் லெம்பா புஜாங் (Lembah Bujang) என்று அழைக்கப்படுகிறது. லெம்பா (Lembah) என்ற மலாய் சொல்லுக்கு பள்ளத்தாக்கு என்று பொருள். புஜாங் என்ற மலாய் சொல்லுக்கு மணமாகாத ஆடவன் என்று பொருள். லெம்பா புஜாங் என்றால் புஜாங் பள்ளத்தாக்கு என்று பொருள். பூஜாங் பள்ளத்தாக்கு சுங்கை பெட்டணியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் குனுங் ஜெராய் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி முக்கிய வணிக மையமாக இருந்திருக்க வேண்டும்.
மலேசியா நாட்டின் கெடா மாநிலத்தில், லெம்பா புஜாங் என்னும் புஜாங் பள்ளத்தாக்கு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே செழிப்பான பகுதியாகத் திகழ்ந்தது. இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையே வேகமாக வளர்ந்து வந்த வணிகம் லெம்பா புஜாங் பகுதியின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவிற்று எனலாம். இந்தியாவிலிருந்து கடல் வழியே பயணித்துச் சுங்கை மெர்போக்கிலிருந்து (Sungai Merpok) கெளாந்தான் (Kelantan) மற்றும் தென்சீனக் கடல் (South China sea) வழியாகச் சைனாவை அடையும் குறுக்கு வழிக் கடற்பாதையில் இப்பகுதி அமைந்திருந்தது. இந்திய வணிகர்கள் சீனாவிற்குக் கடற்பயணம் மேற்கொண்டபோது தங்கிச் செல்லும் இடைவழி (Transit Point) ஆகவும் இப்பகுதி திகழ்ந்தது.
லாம்பா புஜங் இன்றுவரை மிக முக்கியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் ஒன்றாக மாறியது ஏன்? எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இந்தக் கேள்விகளுக்கு விடைகாணும் விதமாக அருங்காட்சியகத் துறையினர் (Museum Department) தொல்லியல் அகழ்வாய்வினை இப்பகுதியில் மேற்கொண்டனர். கர்னல். ஜேம்ஸ் லோ (Colonel James Low) என்பவர் கி.பி. 1864 ஆம் ஆண்டில் இப்பகுதியில் தன் அகழ்வாய்வுகளை மேற்கொண்டார். எச்.ஜி. குவாட்ரிச் வேல்ஸ் தன் மனைவி திருமதி. டோரதி வேல்ஸுடன் கி.பி. 1936 முதல் 1939 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டனர், திருமதி. டோரதி 30 சண்டிகளை (இந்து-பௌத்த ஆலயங்களைக்) கண்டறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் உள்நாட்டுப் பலகலைக் கழகங்களின் தொல்லியல் துறையில் பணியாற்றிய தொல்லியலாளர்கள் தங்கள் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்தனர். இந்த வளாகத்தில் சண்டி புக்கிட் பத்து பாஹாத் (Candi Bukit Batu Pahat) என்னும் இந்துக் கோவில் கண்டறியப்பட்டது. தங்கள் அகழ்வாய்வுகளில் கண்டறிந்த கட்டுமானங்களைக் கொண்டு இந்த வளாகத்திலேயே மறுகட்டமைப்புச் செய்வதிலும் ஈடுபட்டனர்.  அப்போதுதான் இந்த அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து புஜாங் பள்ளத்தாக்கின் வெவ்வேறு இடங்களில்   சண்டி பெண்டியாட், சண்டி பெண்டாங் டாலாம், சண்டி பெங்காலான் பூஜாங் ஆகிய சண்டிகள் கண்டறியப்பட்டன. இவ்வாறு கண்டறியப்பட்ட சண்டிகளின் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு இந்த அருங்காட்சி வளாகத்தில் மறுகட்டமைப்புச் செய்துள்ளனர்.
சண்டி என்ற சொல் சிவனின் தேவியான சண்டிகா (துர்கா) என்ற பெயரிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தச் சண்டியின் அடித்தளத்தைக் கருங்கல்லாலும், செம்பூரான் கல்லாலும் (Laterite stone), செங்கல்லாலும் கட்டினார்கள். சண்டியின்  தூண்கள், உத்திரங்கள் போன்றவை மரத்தால் கட்டப்பட்டன. கூரை ஓலை போன்ற பொருட்களைக் கொண்டு வேயப்பட்டிருக்கலாம்.
லெம்பா புஜாங்கின் வரலாற்று எச்சங்களில் (Historical Relics) இந்து பெளத்த வழிபாட்டுத் தலங்களும் தொல்பொருட்களும் அடங்கும். இங்கு சண்டி புக்கிட் பத்து பாஹாத், சண்டி பெண்டியாட், சண்டி பெண்டாங் டாலாம், சண்டி பெங்காலான் பூஜாங் போன்ற பல சண்டிகளில் கண்டறியப்பட்ட  வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் விதமாக அருங்காட்சியகத் துறை லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகத்தை நிறுவியது. இனி இந்த அருங்காட்சியகத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோமா?
புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம் (Bujang Valley Archaeological Museum) ம��ாய் மொழியில் (Muzium Arkeologi Lembah Bujang)
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கோலா மூடா மாவட்டம் (Kuala Muda District), மெர்போக் (Merbok) நிர்வாக உட்பிரிவு (Mukim), பங்குணன் டிஸ்பென்சரி லாமா (Bangunan Dispensari Lama), 08400, பேக்கன் மெர்போக் (Pekan Merbok) என்ற முகவரியில் அமைந்துள்ளது.  இது மலேசியாவில் உள்ள ஒரே தொல்லியல் அருங்காட்சியகமாகும். MARA தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA) கெடா வளாகமும் இப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
இந்தப் புஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது என்றாலும் இதனை மேதகு அப்துல் ஹாலிம் மு’அட்சாம் ஷா, கெடாவின் சுல்தான் (HRH Sultan of Kedah, Abdul Halim Mua’dzam Shah) அவர்கள் ஜனவரி 23, 1980 ஆம் தேதியன்று முறைப்படி தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மலேசிய அருங்காட்சியகத் துறை இந்த அருங்காட்சியகத்தை நிறுவிப் பராமரித்து வருகிறது.  இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் அகழ்வாய்வுகளை மேற்கொள்வது, ஆய்வுகளைத் தொடர்வது, லெம்பா புஜாங் தளங்களில் கண்டறியப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட (pre-Historic) அல்லது மலேசிய இஸ்லாமிய காலத்திற்கு முற்பட்ட (Pre-Islamic) தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துதல் ஆகியவை ஆகும். புஜாங் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கண்டறியப்பட்ட சண்டிகளைப் பிரித்தெடுத்து, இவற்றின் கட்டுமானப் பொருட்களை இந்த வளாகத்திற்குக் கொண்டுவந்து மறுகட்டுமானம் செய்துள்ளார்கள்.
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகத்தின் காட்சிக் கூடங்கள் மற்றும் சேகரிப்புகள்
இந்த அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புஜாங் பள்ளத்தாக்கின் அளவுப் படிமம் (Scale Model) பள்ளத்தாக்கின் பல இடங்கள் இணைப்புச் சீட்டுகளுடன் (Tags) சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இங்கு இரண்டு முக்கிய காட்சியகங்கள் (Galleries) உள்ளன. இங்கு லெம்பா புஜாங் இருந்ததற்கான சான்றுகளாக பல தொல்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன:
I. தென்கிழக்கு ஆசியாவில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை முதன்மை வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்தத் துறைமுகத்திற்கு அரபு, சீன மற்றும் இந்திய வணிகர்கள் கொண்டு வந்த பொருட்கள் அத்துடன் மலாய் தீபகற்பத்தின் வணிகர்கள் கொண்டுவந்த அகில் (gaharu), சந்தனம் (cendana), பாதரசம் (Mercury),  முதலிய வெளிநாட்டு காட்டு விளைபொருட்கள் (exotic jungle goods) எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மணிகள் (Beads), சீனத்துப் பீங்கான்கள் (Chinese Ceramics), போன்ற தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் பிரஹு சகோர் (Prahu Sagor) என்னும் பாரம்பரிய கெடா மலாய் படகுகள் (Traditional Kedah Malay boats) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை 20 ஆம் நூற்றாண்டு வரை நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
II. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலங்களில் லெம்பா புஜாங் பள்ளத்தாக்கை நுழைமுகத் துறைமுகமாகப் பயன்படுத்திய சமுதாயத்தின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்திய இந்து / பௌத்த மத நம்பிக்கைகளுடன் இணைந்த கட்டிடக்கலை மற்றும் பொருள்சார் கலாச்சார எச்சங்கள்,. இந்து / பெளத்த நம்பிக்கைகளுடன் தொடர்புபடுத்த தக்க இந்துக் கோவில்களின் கட்டடக்கலை வடிவங்களுடன் இந்து / பௌத்த சிறப்பியல்புகளும் மற்றும் சாதனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லெம்பா புஜாங் என்னும் வழிபாட்டுத்தலமே கெடாவில் மிகவும் தொன்மை வாய்ந்த வழிபாட்டுத் தலமாகக் கருதப்படுகிறது. இதனோடு தொடர்புடைய தொல்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் உள்ளும் புறமும் கல்லினால் ஆன உடைந்து சிதைந்த பல்வேறு கட்டிட உறுப்புகள், மட்பாண்டங்கள் (potteries), பூச்சாடிகள் (Vases) மற்றும் கருங்கல் மற்றும் சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட சிவ லிங்கம், கணேசன், நந்தி போன்ற  இந்துக் கடவுள்களின் உருவங்களும் புத்தர் போன்ற பெளத்த உருவங்களும், பிற மனித உருவங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
PC: Muzium Arkeologi Lembah Bujang
நுழைவுக்கட்டணம் (Entrance Fees):
அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்க்க நுழைவுக்கட்டணம் கிடையாது.
சாலை வழியாக (By Road):
சாலை வழியாகச் செல்வதானால் வடக்கு-தெற்கு எக்ஸ்பிரஸ்வே வழியாகக் காரில் செல்லலாம். பெர்லிஸ் (Perlis)அல்லது அலோஸ் செடாரில் (Alor Setar) இருந்து தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும். சுங்கை பெட்டாணி (Sungai Petani) வழியாக வெளியேறி மெர்போக் (Merbok) நோக்கிச் செல்ல வேண்டும். சுங்கை பெட்டாணி (Sungai Petani) பேருந்து முனையத்திலிருந்து மெர்போக்கிற்குச் செல்லும் சுங்கை பெட்டாணி பேருந்தைப் பிடிக்கவும். மெர்போக் சென்றதும் லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் செல்வதற்கான வழிகாட்டிப் பலகையைக் காணலாம்.
இரயில் மூலம் செல்ல (By Train): 
சுங்கை பெடாணி மற்றும் ஆலோர் செடார் இரயில் நிலையங்களில் இரயில்கள் நின்று செல்கின்றன.
அருகில் காணத்தக்க இடங்கள் (Nearby Attractions):
முறையாக முன்பதிவு செய்து கொள்ளும் 10 நபர்கள் அடங்கிய குழுவினருக்கு அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் சுற்றிக்காட்டுகிறார்கள். இங்கு வரும் ஆய்வாளர்களுக்கு உதவுவதற்கு முழுமையான தொல்பொருள் சேகரிப்புகள், நூலகம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்களின் வழிகாட்டுதல்கள் போன்ற வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு:
திரு. அஸ்மான் பின் ஆடம் Mr. Azman bin Adam ([email protected]) திருமதி நுருல் அஸ்லீடா கோசாலி Mrs. Nurul Azlida bt. Ghozali ([email protected])
முகவரி:
லெம்பா புஜாங் தொல்லியல் அருங்காட்சியகம் (Lembah Bujang Archaeological Museum), பெக்கான் மெர்போக் (Pekan Merbok), 08400 மெர்போக் (Merbok), கெடா (Kedah). தொலைபேசி:: +60-4-457 2005. அதிகாரபூர்வ வலைத்தளம்
1.) சண்டி புக்கிட் பத்து பாஹாத் (Candi Bukit Batu Pahat)
சண்டி புக்கிட் பத்து பாஹாத் புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் பூங்காவில் மிகவும் முதன்மையான நினைவுச்சின்னமாகும். தளம் 8 என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த இந்துக் கோவில் டாக்டர் குவாரிட்ச் வேல்ஸால் 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வின் போது கண்டறியப்பட்டது. இவரைத் தொடர்ந்து அலஸ்டேயர் லாம்ப் (Alastair Lamb) 1959 – 1960 ஆண்டுகளில் சரிந்து கிடந்த கோவிலைப் பெயர்த்தெடுத்து மீண்டும் அதே இடத்தில் மறுகட்டமைப்பு செய்தார். இதன் அசல் இடத்தில் கட்டப்பட்ட காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு எனவும் 11 ஆம் நூற்றாண்டு எனவும் கால வரையறைகள் செய்யப்பட்டுள்ளன.
இடிந்து சரிந்த இக்கோவில் முன்பிருந்த அதே இடத்தில் மீண்டும் கட்டமைக்கப்பட்டது. இவ்வாறு முன்பிருந்த அதே இடத்தில் மறுகட்டமைக்கப்பட்ட ஒரே பண்டைய கோவில் இதுவாகும். இதன் பின்னரே பிற சண்டிகள் அதன் அசல் இருப்பிடத்திலிருந்து இங்கு இடமாற்றம் செய்யப்பட்டன. புக்கிட் பத்து பாஹாத் சண்டி மறுகட்டமைப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொல்லியல் அருங்காட்சியகமும் இங்கு அமைக்கப்பட்டது.
இந்தச் சண்டி கருங்க���்களால் கட்டப்பட்டுள்ளது. இஃது இந்துக் கோவிலின் அமைப்புத் திட்டப்படி (Layout of Hindu Temple) கட்டப்பட்ட சண்டியாகும். விமானமும் விமானத்தின் முன்பு தூண்களுடன் கூடிய மண்டபமும் அமைக்கப்பட்டிருந்தது. கருவறை சுமார் நான்கடி உயரம் கொண்ட தாங்குதளத்தின் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவறையைச் சுற்றி சுற்றுச் சுவர்கள் கருங்கல்லால் சுமார் 3 அடி உயரத்திற்குக் கட்டப்பட்டுள்ளது. மண்டபத்திலிருந்து கருவறையை அடைய ஏழு படிக்கட்டுகள் உதவுகின்றன. இங்கு மொத்தம் 67 தூண்களின் அடித்தளங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் 39 தூண்கள் விமானப் பகுதியிலும் மீதி 28 தூண்கள் மண்டபப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவற்றின் மேல் மரத்தூண்களும் உத்திரங்களும் அமைக்கப்பட்டிருக்கலாம். இதன் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருக்கலாம். இதன் காரணமாகவே இக்கோவிலின் மேல்கட்டுமானம் நிலைக்கவில்லை.
தெய்வம் மேடையில் (யோனி) மீது இருத்தப்பட்டுள்ளது. மேடையின் வலப்புறம் சோமசூத்ரா (Somasutra) என்னும் நீர் வடியுங் காடி அல்லது ஜலத்துவாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நீர் முழுக்காட்டின் (அபிஷேகம்) போது நீர் சோமசூத்ரா மூலம் வடிந்து விழுகிறது. ஜலத்துவாரத்தின் வழியாக முழுக்காட்டு நீரைப் பக்தர்கள் சேகரிக்கிறார்கள். இந்த அமைப்பையே இந்துக் கோவில்களில் இன்றும் காணலாம்.
சண்டி புக்கிட் பத்து பாஹாத்தில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் மூடியுடன் கூடிய கல்பெட்டிகள் அல்லது பேழைகளும் (stone boxes, or caskets, with lids) அடங்கும். பேழைகளினுள்ளே பல வித உருவங்களில் ��ங்கத் தகடுகள், ஜாடிகள், மணிகள் மற்றும் சிவன், சக்தி மற்றும் நந்தி சிலைகள் போன்ற பூசைப் பொருட்களும் இருந்தன. சிலையின் பீடம் மற்றும் சிவனின் திரிசூலம் போன்ற வெண்கலப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.
One of the six stone boxes
2.) சண்டி பெண்டியாட் (Candi Pendiat)
சண்டி பெண்டியா புஜாங் பள்ளத்தாக்கின் தொன்மையான தளங்களில் ஒன்று. ஹெச்.ஜி. குவாரிட்ச் வேல்ஸ் (HG Quaritch Wales) இவர் மனைவி டோரதி (Dorothy) ஆகியோரால் 1940 ஆம் ஆண்டுக் கண்டறியப்பட்டது. கி.பி. 11 ஆண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்தச் சண்டி கம்புங் பெண்டியா (Kampung Pendiat) , மெர்போக் என்னும் இடத்தில் முன்பு அமைந்திருந்தது. அமைவிடம் 5° 32′ 57.696” N அட்சரேகை 100° 54′ 28.404” E தீர்க்கரேகை ஆகும். எனவே இதன் பெயர் சண்டி பெண்டியாட் ஆயிற்று.
இங்கிருந்து 1974 ஆம் ஆண்டில் பெயர்த்தெடுக்கப்பட்டுப் புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இந்தச் சண்டியின் தாங்குதளம் செம்பூரான் கற்களைக் (Laterite Stones) கொண்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. கம்புங் பெண்டியாவில் இருந்த சண்டியில் மேல்கட்டுமானம் மரத்தில் கட்டப்பட்டிருந்தது. இங்கு விலைமதிப்பற்ற மணிகள், சீனத்துப் பீங்கான் பத்திரங்கள், நின்ற நிலையில் காட்சி தரும் புத்தரின் வெண்கலச் சிலை மற்றும் பொன்னால் செய்யப்பட்ட பொருட்களுடன் வெண்கலப் பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. ஒரு மண்டபமும் விமானமும் இடம்பெற்றிருந்த இஃது ஓர் இந்துச் சண்டியாகும். இந்த மண்டபமும் விமானமும் ஒன்றிற்கொன்று தனித்தனியே இருந்தது தான் சுவாரஸ்யம் மிக்கது. இதன் மேற்கட்டுமானம் மரத்தூண்களாலும் ஓடுகளாலும் அமைக்கப்பட்டிருக்கலாம்.
3.) சண்டி பெண்டாங் டாலாம் (Candi Bendang Dalam)
சண்டி பெண்டாங் டாலாம் புஜாங் (தளம் எண் 50) பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவில் மறுகட்டமைக்கப்பட்ட சண்டியாகும். இந்தச் சண்டி கம்புங் பெண்டாங் டாலாம் (Kampung Bendang Dalam) என்னுமிடத்தில் 1960 ஆம் ஆண்டுகளில் முதலாவதாகக் கண்டறியப்பட்டது. இதன் அமைவிடம் 6° 9′ 9” N அட்சரேகை 102° 9′ 24.084” E தீர்க்கரேகை ஆகும். இது 1974 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழ்வாய்வு செய்யப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டில் கற்கள் பிரிக்கப்பட்டு புஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.
புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற சண்டிகளைப் போலவே இந்த இந்துச் சண்டியிலும் விமானம் (உள்சுற்று) மற்றும் மண்டபம் (வெளிச்சுற்று) ஆகிய உறுப்புகளுடன் கூடிய தளவடிவமைப்புக் கொண்ட இந்தக் கோவில் முழுவதிலும் இந்து மதத்தின் தாக்கம் காணப்படுகிறது. செவ்வக வடிவ விமானத் தாங்குதளம் 6.75 மீ x 6.25 மீ அளவுகளிலும் செவ்வக வடிவ மண்டபத்தின் தாங்குதளம் 6.75 மீ x 6.20 மீ அளவுகளிலும் செம்பூரான் கற்களைக் (Laterite Stone) கொண்டு கட்டப்பட்டுள்ளது. தூண்களின் அடிப்பகுதி கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியலாளர்கள் இங்கு லிங்கம் (ஆவுடை), பீடம் (யோனி), நீர் வடியும் காடி (சோமசூத்ரம்) ஆகிய அனைத்தையும் அகழ்ந்தெடுத்துள்ளனர். இந்தக் களத்தில் சீனாவின் சோங் வம்சத்தைச் சேர்ந்த பீங்கான் துண்டுகளும் (ceramic shards from Song Dynasty), மத்திய கிழக்கு நாடுகளின் கண்ணாடி எல்லாம் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சண்டி கி.பி. 12 மற்றும் 13 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்படிருக்கலாம் என்று தொல்லியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
4.) சண்டி பெங்காலான் பூஜாங் (Candi Pengkalan Bujang)
சண்டி பெங்காலான் பூஜாங், கெடாவின், புஜாங் பள்ளத்தாக்கில் உள்ள பெங்காலான் புஜாங் (Pengkalan Bujang) என்னுமிடத்தில் அமைந்திருந்த இந்து கோவிலாகும். அமைவிடம் 5° 41′ 59.532” N அட்சரேகை 100° 23′ 37.032” E தீர்க்கரேகை ஆகும். சண்டி பெங்காலன் புஜங் 10 முதல் 14 ஆம் நூற்றாண்டிற்குள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது இது ஹெச்.ஜி. குவாரிட்ச் வேல்ஸ் என்பவரால் 1936 – 1937 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டது. அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறையினர் இத்தளத்தில் 1974 ஆம் ஆண்டில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.
பெங்காலான் புஜாங்கில் புத்தரின் ஐந்து சுடுமண் சிலைகளையும் தர்மச்சக்ர முத்திரை காட்டும் போதிசத்துவரின் வெண்கலச் சிலையினையும் வேல்செஸ் (Waleses) என்பவர் கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் பெங்காலான் புஜாங் இந்துத் தளத்தில் காணப்பட்ட பெளத்தக் கூறுகளைச் சுட்டுகின்றன.
1976 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தளம் எண் 21 இல் இருந்த சண்டி புஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுப் புக்கிட் பத்து பாஹாத் சண்டிக்குப் பக்கத்தில் மறுகட்டமைப்புச் செய்யப்பட்டது. இந்தச் சண்டி தளம் எண் 21 என்று குறிக்கப்பட்டது. இது தளம் எண் 22 அருகில் அமைந்திருந்தது.
புஜாங்க் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகம், மலேசியாவின் யுனிவர்சிட்டி கெம்பங்ஸான் (Universiti Kebangsaan of Malaysia) வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து 1986 ஆம் ஆண்டு முதல் 1991 வரை முகிம் புஜாங் வளாகத்தின் (Complex in Mukim Bujang)  தளம் 23 இல் அகழ்வாய்வினை மேற்கொண்டனர். இந்த அகழ்வாய்வில் 3.5 ஹெக்டர் பரப்பளவில் ஆறு ஸ்தூபிகளைக் கண்டறிந்தனர். இந்த ஸ்தூபிகளில் இந்து மற்றும் பௌத்த மதங்களின் தாக்கம் காணப்படுகிறது.
Tumblr media
சண்டி பெங்காலான் பூஜாங் எண்கோண (Octogonal) வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்தூபியாகும். ஒடிசாவில் காணப்படும் இந்துக் கோவில்களைப் போன்று உபபீடமும் (Upapita), தாங்குதளமும் (Adhshtana) ஸ்தூபியும் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. ஸ்தூபியின் முன்புறம் செங்கல்லால் ஆன மூன்று படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சண்டி சுட்ட செங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கட்டுமானம் என்பது இதன் சிறப்பாகக் கருதப்படுகிறது. செங்கற்களின் கனிம உள்ளடக்கத்தை (mineral content) அறிவதற்கு இரண்டு சோதனைகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஒன்று எக்ஸ்-ரே ஃப்ளூரசன்ஸ் நுட்பம் (X-Ray Fluorescence technique (XRF) இரண்டு எக்ஸ்-ரே ஒளிக்கதிர்  சிதறல் நுட்பம் (X-Ray Diffraction technique (XRD). தொன்மைமிக்க இந்தச் செங்கல்லில் குவார்ட்ஸ் (Quartz), மஸ்கோவிட் (Muscovite) மற்றும் மைக்ரோலைன் (Microcline) ஆகிய கனிமங்களைக் கொண்டிருக்கும் மற்ற கனிமங்கள் லுசிட் (leucite), மூள்ளைட் (mullite) மற்றும் ஜியோதைட் ( geothite) ஆகிய கனிமங்கள் காணப்படுவதாகச் சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
5.) செரோக் டோகுன் எச்சங்கள் (கல்வெட்டு) (Cherok Tokun Relics (Inscription)
செரோக் டோகுன் எச்சங்கள் (கல்வெட்டு) புக்கிட் மேற்தஜம், பினாங்கு (Bukit Mertajam, Penang) என்னுமிடத்தில் உள்ள பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும். இதன் அமைவிடம் 5°21′55.692″N அட்சரேகை 100°27′38.3898″E தீர்க்கரேகை ஆகும். இதற்குப் பத்து செரோக் டோகுன் என்ற பெயரும் உள்ளது. மலேசிய அருங்காட்சியம் மற்றும் தொல்லியல் துறையால் மலேசியாவின் பினாங்கில் கண்டறியப்பட்ட தொன்மைமிக்க ஒரே பெருங்கற்கால நினைவுச் சின்னம் இதுவாகும். கருங்கல்லில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு புனித அன்னாள் தேவாலய (St Anne Church) வளாகத்தில் புக்கிட் மேற்தஜம் அருகே கண்டறியப்பட்டது.
தொன்மைமிக்க இந்தக் கல்வெட்டை கர்னல். ஜேம்ஸ் லோ (Colonel James Low) என்ற பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி (British army officer) 1845 ஆம் ஆண்டு இக்கல்வெட்டைப் பதிவு செய்தார். இந்தக் கல்வெட்டு பல்லவர் காலத்திற்கும் முந்தைய லிபியில் சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டு கி.பி. 5 – 6 ஆம் நூற்றாண்டுகளில் செழித்தோங்கிய கடாரம் அரசுடன் தொடர்புடையது ஆகும்.. இந்தக் கல்வெட்டின் வாசகத்தை ஜே. லெய்ட்லி (J Laidlay) என்பவர் 1848 ஆம் ஆண்டில் மொழி பெயர்த்தார். இக்கல்வெட்டு பாலி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதாக இவர் உறுதிப்படுத்தியுள்ளார். மலேசிய அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்ட பினாங்கைச் சேர்ந்த ஒரே கல்வெட்டு இதுவாகும். அருங்காட்சியகத் துறையினர் 1973 ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைக் காக்க மேற்கூரை அமைத்துள்ளனர்.
குறிப்புநூற்பட்டி 
இந்தோனேஷியா விக்கிபீடியா
கல்வெட்டுகளில் உள்ள ஆட்சியாண்டு வரிசைப்படி முதலாம் இராஜேந்திரன் வென்ற நாடுகள். முனைவர்.இல.தியாகராஜன். பக். 53. In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017 சான்று  திருவல்லம் கல்வெட்டு 228/ 1921
பரமேசுவரா விக்கிபீடியா
பூஜாங் பள்ளத்தாக்கு இந்து – புத்த ஆலயங்கள் – யூனேஸ்கோ பாரம்பரியத் தலங்களாக பரிந்துரைக்கப்படாதா? மலேசியன்டைம்ஸ் மே 23, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இராஜேந்திரசோழனின் படையெடுப்புகளும் அதன் தாக்கமும். பெ.இராமலிங்கம். பக். 420 – 421 In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017
ஸ்ரீ விஜய பேரரசு http://ksmuthukrishnan.blogspot.com/2016/05/blog-post_11.html
Ancient Indian Inscription In Cherok To’kun – Grounds Of St.Anne’s Church Malaysia Today Dec 1, 2015 https://www.malaysia-today.net/2015/11/30/ancient-indian-inscription-in-cherok-tokun-grounds-of-st-annes-church/
Ancient seaport of Sg Batu Putri Zanina New Straits Times 3 February 2019. https://www.nst.com.my/news/2016/05/147317/ancient-seaport-sg-batu
Archaeologists search for a king in Sungai Batu Opalyn Mok, Malay Mail, June 09 2017 https://www.malaymail.com/news/malaysia/2017/06/09/archaeologists-search-for-a-king-in-sungai-batu/1395663
Bujang Valley Archaeological Sites https://www.timothytye.com/malaysia/kedah/bujang-valley.htm
Bujang Valley is Our National Heritage Muthiah Alagappa https://carnegieendowment.org/2014/03/31/bujang-valley-is-our-national-heritage-pub-55215
Bujang Valley Wikipedia
History of Bujang Valley ( Lembah Bujang) https://sites.google.com/site/ashweenaresearch/history-of-bujang-valley-lembah-bujang
Kadaram or Bhujanga http://veda.wikidot.com/info:kadaram
Lembah Bujang. National Archives of Malaysia http://www.arkib.gov.my/en/web/guest/lembah-bujang
Srivijaya Wikipedia
yogi கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 4 http://yogiperiyasamy.blogspot.com/2014/10/blog-post_19.html
youtube
youtube
youtube
கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம் பண்டைத்தமிழர் கடல்சார் வணிகம், ஸ்ரீவிஜய பேரரசின் கடல்சார் வணிக ஏகபோகம், கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுப்பு மேற்கொண்டு பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்ற செய்தி; மலேசிய நாட்டின் கெடா மாநிலம், கெடா துவா (Kedah Tua) என்னும் பகுதியில் கி,மு.
0 notes
iramuthusamy · 6 years
Text
பண்டைத் தமிழ் வணிகர்கள் தொடக்கத்தில் மரக்கலங்களில் இந்தோனேசிய தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் சென்று கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். அரேபியர்கள் வாசனைப் பொருட்களைத் தமிழர்களிடமிருந்து பெற்று மேற்குலக நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். பின்னாட்களில் தமிழர்கள் நீண்ட கடற்பயணம் மேற்கொண்டு சீனாவுடன் கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். சீனத்துப் பண்டங்களை ரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்தார்கள். கடல்சார் வணிகமும் கடற்பரப்பும் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கி.பி. 6 ஆம் நூற்றண்டில் தென்கிழக்காசியாவின் ஸ்ரீவிஜய பேரரசு சீன நாட்டு வாணிகம் தங்கள் மூலம்தான் நடக்கவேண்டும் என வணிகக் கட்டுப்பாடுகள் விதித்தது. கடற்பகுதியையும் கடல் வணிகத்தையும் பாதுகாப்பதற்காக முதலாம் இராஜேந்திர சோழன் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுத்தான் பதின்மூன்று தென்கிழக்காசிய நாடுகளை வென்று தமிழர்களின் கடல்சார் வணிக மேலாதிக்கத்தை நிலைநாட்டியதால் கடாரம் கொண்டான் என்ற விருதுப்பெயர் பெற்றான்.
இராஜேந்திர சோழன் வென்ற கடாரம், மலேசிய நாட்டின் கெடா மாநிலத்தில் அமைந்துள்ள பூஜாங் பள்ளத்தாக்குப் பகுதியாகும். இது மிகத் தொன்மையான மாநிலம் ஆகும். கெடா துவா (Kedah Tua) என்னும் பண்டைய நாகரிகம் கி,மு. 535 ஆம் ஆண்டுகளில் கெடாவில் தழைத்தோங்கி இருந்தது. இது தென்கிழக்காசியாவின் மிகத்தொன்மையான நாகரிகம் ஆகும். கெடா துவா நாகரிகம், ஜாவாவில் கி.பி. 9 நூற்றண்டில் நிலவிய போரோபுதூர் (Borobudur) நாகரிகத்திற்கும், கம்போடியாவில் கி.பி. 12 ஆம் நூற்றண்டில் நிலவிய அங்கோர்வாட் நாகரிகத்திற்கும் முந்தையது என்று இப்பகுதியில் 1936 -1937 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் நிரூபித்து வருகின்றன. இங்குக் கண்டறியப்பட்ட சண்டி என்னும் வழிப்பாட்டுக் கட்டமைப்புகள், தொல்லியல் சின்னங்கள், உடைந்த சிற்பங்கள் எல்லாம் இந்து மற்றும் பெளத்த சமய நாகரிகத்தின் தாக்கங்களை உறுதிப் படுத்துகின்றன. இது கடாரம் பற்றிய இரு பதிவுகள் கொண்ட தொடராகும்.
கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம் கடாரம் 2: புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் தளங்கள் மற்றும் அருங்காட்சியகம்
இத்தொடரின் முதல் பதிவு இதுவாகும்.
மலாய் தீபகற்பம் 
மூன்று பக்கம் நீரால் சூழ்ந்து இருக்கும் ஒரு நிலப்பரப்புத் தீபகற்பம் (Peninsula) ஆகும். தமிழில் மூவலந்தீவு அல்லது குடாநாடு என்று பெயர்.  மலாய் தீபகற்பம் (English: Malay Peninsula; Malay: Semenanjung Tanah Melayu; Thai: คาบสมุทรมลายู) .தென்கிழக்காசியாவில் தென் வடலாக அமைந்துள்ள தீபகற்பம் ஆகும். இந்தத் தீபகற்பத்தில் மியான்மர், மலேசிய தீபகற்பம், தெற்கு தாய்லாந்தின் தென்கோடி முனைகள் இடம்பெற்றுள்ளன. இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவை மலாய் தீபகற்பத்திலிருந்து பிரிப்பது மலாக்கா நீரிணை (Malacca Straits) .ஆகும். மலாய் தீபகற்பத்தின் தென் கடற்கரையைச் சிங்கப்பூர் தீவிலிருந்து யோகார் நீரிணை பிரிக்கிறது. மலேசிய தீபகற்பம் பண்டைய காலத்தில் சுவர்ணபூமி என்று அழைக்கப்பட்டது. தீபகற்ப மலேசியாவின் பெர்லிஸ், கெடா, வடக்கு பெராக் மாநிலங்களையும் சுவர்ணபூமி என்று குறிப்பிட்டார்களாம்.
கெடா
Candi Pengkalan Bujang சண்டி பெங்காலான் புஜாங் PC: Kadaram Bujang Valley Facebook
மலாய் தீபகற்பத்தில் 11 மாநிலங்கள் அமைந்துள்ளன. இத்தீபகற்பதின் வடமேற்குப் பகுதியில், 9000 சதுர கி.மீ. பரப்பளவில், அமைந்துள்ள கெடா (Kedah) மலேசியாவில் ஒரு மாநிலம் ஆகும். இதன் அமைவிடம் 6°07′42″N அட்சரேகை100°21′46″E தீர்க்கரேகை ஆகும். கெடா மாநிலத்தில் பெருநிலமும் (Main Land) லங்காவித் தீவுகளும் (Langkawi islands) இடம்பெற்றுள்ளன. கெடா மாநிலத்தின் தலைநகர் அலோர் சேதார் (Alor Setar) ஆகும். இந்த மாநிலம் மலேசியாவின் நெற்களஞ்சியம் (Rice Bowl of Malaysia) என்றழைக்கப்படுகிறது.
பெயர்க்காரணம் 
கெடாவே தென்கிழக்காசியாவின் பண்டைய அரசுகளில் ஒன்றாகக் கருதப்படும் கடாரம் (English: Kadaram) என்பது பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும். கிடாரம் என்றும் இப்பகுதி அழைக்கப்பட்டது.
சங்க இலக்கியங்களில் கடாரம் என்று அறியப்பட்டதும், தென்கிழக்காசியாவின் அரசுகளில் ஒன்றாகக் கருதப்பட்டதுமான  ஒரு தொன்மைமிக்க அரசு (நாடு) தற்காலத்தில் கெடா என்ற மாநிலமாக மலேசியாவில் இடம் பெற்றுள்ளது. கெடா அல்லது கயிடா என்றால் ய���னைகளைக் கன்னி வைத்து பிடிக்கும் இடம் என்றும் தெரிகிறது. சங்க இலக்கியம் கெடாவைக் காழகம் என்று சுட்டுகிறது.
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளம்தலை மயக்கிய நனந்தலை மறுகு (பட்டினப்பாலை 191 – 193, கடியலூர் உருத்திரங் கண்ணனார்)
ஈழத்திலிருந்து உணவுப் பொருட்களும், கடாரத்திலிருந்து  நுகரும் பொருட்களும், மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த பலவிதப் பண்டங்களும் கலந்து நிறைந்திருக்கும் அகன்ற பரந்த தெருக்களைக் கொண்ட புகார் நகரம்” என்று கடியலூர் உருத்திரங் கண்ணனார் விவரிக்கிறார்.
தமிழகதிற்கும் தென்கிழக்காசியவிற்கும்  இடையே நிலவிய வணிகத் தொடர்பைப் பட்டினப்பாலை வரிகள் விளக்குகின்றன. காழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் எவை என்பது பற்றிப் பாடலில் குறிப்பிடவில்லை. “காழகத்து ஆக்கம்” என்ற சொற்றொடருக்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் நுகரும் பொருட்கள் என்று விளக்கம் தருகிறார். அதாவது காழகம் என்ற இடத்திலிருந்து வந்த நுகரும் பொருட்கள் என்பது விளக்கம். இந்த உரையாசிரியர் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் (சிலப்பதிகாரம். மதுரைக் காண்டம் 14. ஊர்காண் காதை; 108 – 110)
இந்த வரிக்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் “அருமணவன், தக்கோலி, கிடாரவன், காரகில் என்று சொல்லப்பட்ட பல்வகைத்தாகிய தொகுதியும்” என்று விளக்கமளிக்கிறார். அகிலிற்கு (Common Name: Agarwood; Botanical Name: Aquilaria malaccensis; Family: Thymelaeaceae) காழ்வை என்ற பெயர் உள்ளது. மரத்தில் பல வகைகள் உள்ளன. கேரளவில் விளைந்தது வெள்ளை அகில். காரகில் என்னும் கருப்பு அகில் கிடைத்த இடத்தை அருமணம் என்று குறிப்பிடுகிறார். அருமணம் என்ற தீவிவிலிருந்து வந்த யானைக்கு அருமணவன் என்று பெயர். அருமணம்  என்பது ஒரு தீவுப் பெயராகத் தெரிகின்றது. அஃது அரிய மணப்பொருள்கள் விளைவது என்று பொருள்படும் தமிழ்ப் பெயராகவும் இருக்கலாம். அடியார்க்கு நல்லார் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
அகிலின் இனங்கள் (Species): Aquilaria brachyantha இனம் மலேசியாவிலும், Aquilaria beccariana இனம் இந்தோனேசியாவிலும், Aquilaria crassna இனம் கம்போடியா, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளிலும், Aquilaria cumingiana இனம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலும் விளைகின்றன.
கடாரம் என்றால் கொப்பரை, அகன்ற பானை, ‘பெரிய கடாய்’ கருமை கலந்த பொன்னிறம் என்றெல்லாம் தமிழில் பொருள் கொள்கிறார்கள். கி.பி,.. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சுபாரஜாதகம் என்னும் வடமொழி இலக்கியம் புஜாங் பள்ளத்தாக்கில் லங்கா-ஷோபா மற்றும் கடக-த்விபா ஆகிய இரண்டு துறைமுகங்களைக் குறிப்பிடுகிறது. கௌமுடி மஹோத்சவம் மற்றும் கதா ஆகிய வடமொழி இலக்கியங்கள் கெடாவை, கடஹா என்று சுட்டுகின்றன. இளவரசி குணவதி கடஹாவிலிருந்து இந்தியாவிற்குக் கடற்பயணம் மேற்கொண்டபோது இவளுடைய கப்பல் ஸ்வர்ணதீபம் கடற்பகுதியில் உடைந்ததைக் கதாசரித்திரசாகரம் என்ற நூல் குறிப்பிடுகிறது. தம்ரலிப்தி தொடங்கிக் கடஹத்வீபா வரை மேற்கொண்ட கடற்பயணம் பற்றி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத நூலான சமைரச்சகஹா விவரிக்கிறது. ஸ்ரீ விஜயாபதி கடஹாவை ஆண்ட செய்தியும் குறிப்பிடுகிறது.
வில்கின்சன் என்பவர், ‘கெடா’ என்ற சொல் ‘Kheddah’ எனும் வார்த்தையிலிருந்து உருவானதாகக் கூறுகிறார். அதற்கு ‘யானை வலை’ என்று பொருள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரொலண்ட் பிராட்டெல் எனும் எழுத்தாளர், ‘கெடா’ எனும் சொல் ‘Gedda’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது என்று கருதுகிறார்.
இந்தப் பகுதி தாய்லாந்து மொழியில் சிய்புரி (English: Syburi; Thailand: ไทรบุรี) என்று சயாமியர்களால் அழைக்கப்பட்டது. அரபிய மொழியில் கெடா என்றால் கால்கள் கொண்ட கிண்ணம் என்பது பொருள். கடஹா (English: Qataḥa; Arabic: فتح‎;) மற்றும் கலஹ்பார் (English: Qalaḥbar; Arabic: قلحبر‎;) என்றும் அரேபியர்களால் அழைக்கப்பட்டது. அரேபியர்கள் வட மலேசிய தீபகற்பத்தை கடஹா (English: Qataḥa; Arabic: فتح‎;) என்றும் கலஹ்பார் (English: Qalaḥbar; Arabic: قلحبر‎;) என்றும் அழைத்ததுண்டு. பெர்சியர்கள் இதனைக் குவலா என்று அழைத்ததுள்ளார்கள். குவலா என்றால் நகரம் என்று பொருளாம். அமைதியின் வாழ்விடம் என்று பொருள்தரும் டருல் அமன் (Darul Aman) என்ற மரியாதைக்குரிய இணைப்பெயராலும் அறியப்படுகிறது. சீனத்துக் கடலோடிகள் சியே-ச்சா, ச்சியா-ச்சா, ச்சி-தோ, ச்சி-தா, கியெ-ட்ச்சா ஆகிய பெயர்களால் கெடாவை அறிந்திருந்தார்களாம்.
வரலாறு 
கி.பி. நான்காம் நூற்றண்டில் பூர்ணவர்மன் என்ற மன்னன் தன்னை விஷ்ணுவின் பிரதிநிதியாய்க் கொண்டு விஷ்ணுபாதம் என்று ஒன்றைச் செதுக்கி தருமநகரா என்ற இந்துப் பேரரசை ஆண்டு வந்தான். இந்தப் பகுதி மேற்கு ஜாவாவில் காம்புங் நாகா (Kampung Naga) என்னும் பகுதி என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மன்னனின் அறிவிப்புகளை டுகு கல்வெட்டு (Tugu Inscription) பதிவு செய்துள்ளது.
சீன பௌத்த அறிஞரும் பயணியுமான யிஜிங் (I-Tsing) தாங் வம்சம் (கி.பி. 618–907) சீனாவை ஆண்டபோது வாழ்ந்தவர். மத்திய ஜாவாவின் வடக்குக் கடற்கரையில் அமைந்திருந்த ஹோலிங்கின் (கலிங்கா) ராஜ்யத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.இவர் கி.பி. 671 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழியில்கி.பி. 672 ஆம் ஆண்டு ஸ்ரீவிஜய நாட்டிற்கு வந்து இந்தியாவிற்குச் செல்லும் கப்பலுக்காகக் காத்திருந்த செய்தியைத் தம் பயணக் குறிப்பில் பதிவு செய்துள்ளார்.
“20 நாட்களுக்குள் நாங்கள் ஷி-லி-ஃபோ-ஷியை (ஸ்ரீ விஜயா) வந்தடைந்தோம். அங்கே நான் ஆறு மாதங்கள் தங்கி சப்தவித்தியா (சமஸ்கிருத இலக்கணம்) கற்றேன். அரசர் என்னிடம் நட்பு பாராட்டி என்னை மெலாயு நாட்டுக்கு (ஜம்பி) அனுப்பினார். அங்கே நான் இரண்டு மாதங்கள் தங்கினேன். அங்கிருந்து நான் வேறு திசையில் திரும்பி ச்சியே-ச்சா (கெடா) சென்றேன். 12ஆவது மாதத்தில் நான் அரசரின் கப்பலில் இந்தியாவுக்குப் பயணமானேன். சியே-ச்சாவிலிருந்து 10 நாட்களுக்கு மேல் வடக்காகச் சென்று நிர்வாண மக்களின் நாட்டை (நிக்கோபார் தீவுகள்) அடைந்தோம்.” என்று குறிப்பிடுகிறார்.
ஸ்ரீவிஜய பேரரசு (கி.பி. 650–1377) சுமத்திராத் தீவை கொண்டு அமைந்த பெளத்த இந்து பேரரசாகும். மலாய் தீபகற்பத்தில் நிலவிய கடல்சார் வணிக வளர்ச்சியாலும், பெளத்த இந்து மதங்களின் செல்வாக்கினாலும் தென்கிழக்காசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் இது பரவியிருந்தது. பலம் வாய்ந்த பேரரசாகவும் திகழ்ந்தது. இதன் தலைநகரம் சுமாத்திரா தீவின் மூசி ஆற்றங்கரையில் பலெம்பாங் என்னுமிடத்தில் அமைந்திருந்தது. இதே காலகட்டத்தில் கலிங்கர்கள் உருவாக்கிய சைலேந்திரப் பேரரசு (கி.பி. 750 to 850) மத்திய ஜாவாவின் கெடு சமவெளியில் ஆண்டு வந்தது. இந்தப் பேரரசு மகாயான பெளத்த மதத்தை இப்பகுதியில் நிலைநிறுத்திப் போற்றி வளர்த்தது.
முதலாம் இராஜராஜனின் (கி.பி. 985-1014)பெரிய லெய்டன் செப்பேட்டில் ஆனைமங்கலம் எனும் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இஃது “ஆனைமங்கலம் செப்பேடு” என்றும் அழைக்கப்படுகிறது. இம்மன்னனின் 21 ஆம் ஆட்சியாண்டு 92 ஆம் நாளில் வெளியிடப்பட்ட இச்செப்பேட்டின் தமிழ்ப்பகுதியில் ஒரு ப��த்தப் பள்ளி நாகப்பட்டினத்தில் எடுக்கப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப்பள்ளியைக் கடார நாட்டு சூளாமணிவர்மன் என்பவன் க்ஷத்ரியசிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்து நாகப்பட்டனத்தில் எடுப்பித்தான்.என்றும் இந்தப் பௌத்தப் பள்ளிக்கு முதலாம் இராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரில் ஏராளமான நிலங்களை வரி நீக்கி அளிக்க ஆணையிட்ட செய்தியையும் இவருக்குப் பின்னால் இவரின் மைந்தன் மகா விஜயதுங்கவர்மன் என்போனுக்கு இது தொடரப்படவேண்டும் என்றும் இச்செப்பேடு குறிக்கிறது.
சைலேந்திரவம்ச சம்புதீன ஸ்ரீ விஷயயாதிபட்டின கடஹாதிப்பட்டயம் ஆதனவாதா மாரவிஜயோதுங்கவர்மன் (பெரிய லெய்டன் செப்பேட்டின் சம்ஸ்கிருதப் பகுதி)
பெரிய லெய்டன் செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் முதலாம் இராஜேந்திர சோழன் வெற்றிகண்ட பகுதிகளில் ஒன்றாக ஸ்ரீ விஜயம் குறிப்பிடப்படுகிறது. ஸ்ரீ விஜயத்தை ஆண்ட மன்னர்கள் கடாரத்தரையர்கள் (கடார நாட்டின் மன்னர்கள்) என்றும் குறிப்பிடப்படுகிறது. எனவே ஸ்ரீ விஜயத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி கடாரம் வரை பரவியிருந்தது. சோழர்களுக்கும் ஸ்ரீவிஜய வம்ச மன்னர்களுக்கும் இடையே 7 ஆம் நூற்றாண்டு வரை நல்ல நட்பு நிலவியுள்ளது. 
தமிழக வணிகர்கள் கடாரம் சென்று வணிகம் மேற்கொண்டபோது ஸ்ரீவிஜய மன்னன் வணிகர்களுக்குப் பல இன்னல்களைக் கொடுத்தான். சீனத்துடனான தமிழர்களுடைய வணிகம் ஸ்ரீவிஜய அரசின் மூலமாகவே நடக்கவேண்டும் ஸ்ரீவிஜய மன்னன் கட்டுப்பாடுகளை விதித்தான்.
A mural depicting the siege of the Kedah, the invaders are the Cholas. This picture shows the first usage of the flamethrower used by Indians. Chola Navy
முதலாம் இராஜேந்திர சோழன் (கி.பி. 1014-1044) கடற்பரப்பையும் கடல்சார் வணிகத்தைத் தமிழ் வணிகர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தென்கிழக்கு ஆசிய அரசுகளின் மீது படையெடுத்தான். இந்தச் செய்தி 14 ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1028) கல்வெட்டுகளிலும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும் (கடாஹ என்ற பெயருடன்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோவிலின் தெற்கு விமானச் சுவற்றில் முதலாம் இராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது மேற்கொண்ட படையெடுப்பு மற்றும் பெற்ற வெற்றிகள் பற்றிய செய்திகள்  கி.பி. 1030 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட மெய்கீர்த்தியில் இடம்பெற்றுள்ளன.
அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச் சங்கிராம விசையோத்துங்க வர்ம ஆகிய கடாரத்தர சனை வாகையும் பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து உரிமையில் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத்தோ ரணமும் மொய்த் தொளிர் புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும்
என்ற மெய்க்கீர்த்தி வரிகள் மூலம் முதலாம் இராஜேந்திர சோழன் தன் கப்பற்படையின் வலிமையால் கடார வேந்தனாகிய சங்கிராம விஜயோதுங்கனுடன் வாகாயம் என்னுமிடத்தில் போர் புரிந்து வென்றான். இந்தப் போர் கடார நாட்டுக் கடற்கரையில் மட்டுமின்றி அவனுடைய உள்நாட்டுப் பகுதிகளிலும் நிகழ்ந்து அவனுடைய அகநகரை அழித்த செய்தி கூறப்பட்டுள்ளது. மேலும் அவனைச் சிறைப்பிடித்ததுடன் அவனது பெருஞ்செல்வதையும், வித்யாதர தோரணத்தையும் பட்டத்து யானையையும் சோழ வேந்தன் கவர்ந்தான். எனினும் இவன் தன் ஆட்சியை அங்கு நிறுவவில்லை.
தொடர்ந்து இம்மன்னன் நிறைசீர் விசையம், துறைநீர் பண்ணை, மலையூர், மயிருடிங்கம், இலங்கா அசோகம், மாப்பபளம், மேலிலிம்பங்கம், வளைப்பந்தூர், இலாமுரிதேசம், தக்கோலம், மாதமாலிங்கம், மானக்கவாரம் ஆகிய நாடுகளை வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ மன்னன் தென்கிழக்கு ஆசியாவில் மலாய் தீபகற்பத்தில் இருந்த 13 அரசுகளை வென்றதாக வரலாற்றாசிரியர் மஜும்தார் கூறியுள்ளார். சில இராணுவக் குடியிருப்புகளை மட்டும் இவர் சில இடங்களில் நிறுவியுள்ளார்.
தொடுகடற் காவல் கடுமுரன் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்கு யாண்டு…
இறுதியாக மலாக்காவின் நுழைமுகத் துறைமுகத்தைக் கொண்ட கடார நாட்டினை வென்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியைச் சிறப்பிக்கும் விதத்தில் கடாரம் கொண்டான் என்னும் விருதினைப் பெற்றான். முதலாம் இராஜேந்திரன் தன் 14 ஆம் ஆட்சியாண்டில் 70 ஆம் நாளுக்கும் 187 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட 117 நாட்களில் தென்கிழக்காசியாவின் கடாரப் பகுதிகளின் மீது படையெடுப்பினை நிகழ்த்தி அங்கிருந்த 13 நாடுகளை வென்றார் என்று முனைவர்.இல.தியாகராஜன் குறிப்பிடுகிறார். சோழர் காலத்து உலா பிள்ளைத்தமிழ் மற்றும் பரணி இலக்கியங்களும் இம்மன்னனின்  புகழ் பாடுகின்றன.
தண்டேவிக் கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காபுரி புரந்த கற்பகம் (குலோத்துங்க சோழன்  உலா 34 – 35)
சாவகம் எறிந்து அருமணம் பெரிது சிந்தத் தகர்த்துத் மலையூரில் வருப்புரிசை நள்ள கோஅகம் நெகிழ்ந்து குலையும்படி கடாரம் கொள்ளும் ஒரு சோழன் மருகா குமர் கொண்கா (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் பாடல் 92)
கங்காநதியும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர் கோன் (விக்கிரம சோழன் உலா 49 – 50)
களிறு கங்கை நீர் உண்ண, மண்ணையில் காய் சீனத் தொடே கவவு செம்பியன் குளிறு வெண் திரைக் குரை கடாரமும் கொண்டு மண்டலமும் குடையுள் வைத்ததும் (கலிங்கத்துப் பரணி 203)
சோழர்கள் கெடா (மலாய்), சயாம் (தாய்லாந்து), ஈழம் (இலங்கை) நாடுகளை ஆண்ட செய்தியும், முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும் கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டைய பர்மாவின் தலைநகராகத் திகழ்ந்த புரோம் நகரம் வைணவ வழிபாட்டு மையமாகவும் விளங்கியுள்ளது. இந்தப் புரோம் நகர் “புகநாம்யோம்” என்ற பர்மியப் பெயராலும் அறியப்பட்டது. இந்தப் பர்மியச் சொல்லுக்கு விஷ்ணுபுரம் என்பது பொருள்.
சுமத்திராவில் பாலேம்பாங் என்ற சிறிய நாடு இருந்தது. இதன் அரசர் சுல்தான் பரமேஸ்வரா (கி.பி. 1344-1414) ஆவார். சுல்தான் என்பது இஸ்லாமிய அரசர்களைக் குறிக்கும் சொல். பரமேஸ்வரா என்பது இந்துப் பெயர். இவர் எப்படிச் சுல்தான் என்று குறிக்கப்பட்டார் என்பது வியப்பாயுள்ளது. இவர் கி.பி. 1389 முதல் 1398 வரை சிங்கப்பூரை ஆண்டு வந்தார். இவர் கி.பி. 1402 ஆம் ஆண்டில் துமாசிக் (தற்போதைய பெயர் சிங்கபூர்) என்ற இடத்திலிருந்து வந்து மலாக்காவை உருவாக்கினர். இவருடைய ஆட்சியின் போது மலாக்கா மிகவும் புகழ் பெற்ற வாணிகத் துறைமுகமாகத் திகழ்ந்தது. இங்கே 80 மொழிகள் பேசப்பட்டனவாம்.
புஜாங் பள்ளத்தாக்கு
சமஸ்கிருதத்தில் புஜங்க என்றால் நாகம் அல்லது கடல் நாகம் என்று பொருள். புஜங்க என்ற சொல் புஜாங் என்று மருவியிருக்கலாம். வடக்கே குனோங் ஜெராய் மலையில் (Gunung Jerai) இருந்து த��ற்கே சுங்கை மூடா ஆறு (Sungai Muda River) வரை பரந்து விரிந்து 224 சதுர.கீ.மீ பரப்பளவில் அமைந்துள்ளது பூஜாங் பள்ளத்தாக்கு. மலேய மொழியில் சுங்கை என்றால் ஆறு என்று பொருள். குனோங் ஜெராய் மலையின் உயரம் 1217 மீ. ஆகும். கி.பி. 5 ஆம் நூற்றண்டிலிருந்தே சுங்கை மூடா ஆறு கெடாவின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது. சுங்கை மூடாவின் கழிமுகம் புஜாங் பள்ளத்தாக்கைச் செழிமைப்படுத்தியிருந்தது.
தமிழகம், இந்தோனேசியா, சீனா இடையிலான கடல் வணிக வழியில் பூஜாங் பள்ளத்தாக்கு, மலாக்கா நீரிணைக்குள் நுழைய ஒரு வசதியான இடத்தில் அமைந்திருந்தது. தமிழகம் மற்றும��� பூஜாங் பள்ளத்தாக்கு நேரான அட்ச ரேகையில் அமைந்துள்ளதைக் காணலாம். வடகிழக்கு பருவக்காற்றுக்கு மலாய்த் தீபகற்பமும் தென்மேற்குப் பருவக்காற்றுக்குச் சுமத்திராவும் தடுப்புக்களாக இருப்பதையும் காணலாம்.
தமிழகத்திலிருந்து தென்கிழக்காசிய நாடுகளில் கடல்சார் வணிகம் மேற்கொண்ட வணிகர்கள் முதலில் சென்றடைந்த துறைமுகம் பூஜாங் பள்ளத்தாக்கில் இருந்துள்ளது. தமிழகத்திலிருந்து வங்கக்கடல் வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்ற மரக்கலங்கள் நேராக மலாக்கா நீரிணையை நோக்கிச் சென்றன. கடலோடிகள் குனோங் ஜெராய் சிகரத்தை இலக்காகக் கொண்டு மரக்கலங்களைச் செலுத்தினார்களாம். கடலில் சுமார் 100 கடல் மைல் தொலைவிலிருந்தே ஜெராய் சிகரத்தைக் காணவியலுமாம். அக்காலத்தில் மரக்கலங்களுக்குத் திசைகாட்ட சிகரத்தின் உச்சியில் நெருப்பு மூட்டினார்களாம். பண்டைய மரக்கலங்கள் சென்றடைந்த துறைமுகம் மெர்போக் நதியின் கழிமுகப் பகுதியில் அமைந்திருக்கலாம்.
இங்கு கண்டறியப்பட்ட பெளத்தக் கல்வெட்டுகள், பண்டைக்காலத்தில் தமிழகம் மற்றும் கலிங்கக் கடலோடிகளும்  கடல்சார் வணிகர்களும் இங்கு வந்து சென்றதற்குச் சான்று பகர்கின்றன.
மலாய் கடலோடிகள் ஏற்கனவே வங்காள விரிகுடாவில் நீண்ட தூர கடற்பயணங்களை மேற்கொண்டனர். மலாய் நாட்டின் மழைக் காடுகளில் கிடைத்த சந்தனம், ஏலக்காய், மிளகு, கிராம்பு, பாக்கு, மஞ்சள், பாக்கு, சித்தரத்தை போன்ற மலையகத்து நறுமணப் பொருட்களையும் ஈயம், தகரம் போன்ற உலோகங்களையும் எடுத்துச் சென்று கொடுத்து பட்டு, வேறு உலோகங்கள், மற்றும் தங்கள் தாய்நாட்டு மக்கள்  மிகவும் விரும்பிய அரிதான பொருட்களைப் பெற்றுப் பண்டமாற்று வணிகம் புரிந்தனர்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய வணிகம், கி.பி. ஏழாம் நூற்றண்டளவில் மலாக்கா நீரிணையில் இந்திய, அரேபிய, சீன வணிகர்களுடனான கடல்சார் வணிகம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இதன் காரணமாகப் புஜாங் பள்ளத்தாக்கு ஒரு நுழைமுகத் துறைமுகமாக (Entreport) உருவெடுத்தது. கி.பி. பன்னிரெண்டாவது நூற்றாண்டு வரையிலும் இந்த வணிகம் செழித்தோங்கியுள்ளது. பண்டைய கடலோடிகள் சாதகமாகப் பருவக்காற்று வீசும் காலங்களையே நம்பித் தங்கள் கடற்பயணங்களைத் திட்டமிட்டுப் பயணம் மேற்கொண்டனர். இதனால் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு ஒரே பருவகாலத்தில் கடற்பயணம் மேற்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. புஜாங் பள்ளத்தாக்கு போன்ற பாதுகாப்பான துறைமுகங்களில் பருவக்காற்று மற்றங்களுக்காகக் காத்திருந்த பின்னரே பயணத்தைத் தொடர முடிந்தது.
வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டவர்களின் வருகையால் புஜாங் பள்ளத்தாக்கில் வழிபாட்டுத் தலங்கள் பல்கிப் பெருகின. பல்வேறு வழிபாட்டுதலங்கள் உள்நாட்டுப் பகுதிகளில் அமைந்தன. இந்த நூற்றாண்டுகளில் கெடாவின் கலாச்சார வளர்ச்சியானது, இந்தியா, ஸ்ரீ விஜயா மற்றும் கெமர் போன்ற பல்வேறு கலாச்சார மரபுகளைச் சேர்ந்த மக்களின் கலவையாக உருவெடுத்தது.  கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையிலும் பெளத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்கள் வந்து சென்றார்களாம். தென்னிந்தியாவிலிருந்து கலிங்கர் மஹாயான பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்த வணிகர்கள் பெளத்த மதத்தை இங்கு கொண்டு வந்ததாகவும் ஒரு கருதுகோள் உள்ளது.
புஜாங் பள்ளத்தாக்கில், 1840ஆம் ஆண்டுகளில், சண்டி என்னும் வழிபாட்டுத் தலங்கள் கண்டறியப்பட்ட பின்பு இப்பகுதி தொல்லியலாளர்களின் சொர்க்கமாக மாறிப்போயிற்று. சண்டி என்ற சொல் சிவனின் தேவியான சண்டிகா (துர்கா) என்ற பெயரிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தச் சண்டியின் அடித்தளத்தைக் கருங்கல்லாலும், செம்பூரான் கல்லாலும், செங்கல்லாலும் கட்டினார்கள். சண்டியின்  தூண்கள், உத்திரங்கள் போன்றவை மரத்தால் கட்டப்பட்டன. கூரை ஓலை போன்ற பொருட்களைக் கொண்டு வேயப்பட்டிருக்கலாம். இவை அழிந்து போனதற்கு இத்தகைய கட்டுமானங்களே காரணமாகவிருக்கலாம்.
இறை வழிபாட்டிற்கும் மட்டும் சண்டிக் கோவில்கள் கட்டப்படவில்லை. இறந்துபோன அரச குடும்பதினரின் நினைவைப் போற்றும் விதமாகப் பள்ளிப்படைக் கோவிலாகவும் சண்டிகள் எழுப்பப்பட்டன. இவை வணக்கத்திற்குரிய நினைவிடங்களாகவும் திகழ்ந்தன. புஜாங் பள்ளத்தாக்கின் ஆற்றுப் படுகைகளை ஒட்டி எழுபது சண்டிகள் இருந்தனவாம்.  ஆனால் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே சண்டிக் கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் சில அகழ்ந்தெடுக்கப்பட்டு, இவற்றின் தோண்டி எடுக்கப்பட்ட கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்திப் பேக்கான் மெர்பொக், கெடா (Pekan Merbok, Kedah) என்னுமிடத்தில் மறுகட்டுமானம் செய்துள்ளார்கள்.
தொல்லியல் அகழ்வாய்வுகள் 
மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் வல்லுனர்களின் பரீட்சார்த்த ஆய்வகமாகக் கருதப்படுகிறது. புஜாங் பள்ளத்தாக்கில் 1936 – 1938 ஆம் ஆண்டுகளில் ஹெச்.ஜி.குவாட்ரிச் வேல்ஸ் (H.G .Quaritch Wales), இவர் மனைவி டோரதி வேல்ஸ் (Dorothy Wales) மற்றும் அலஸ்ட்டெர் லாம்ப் (Alastair Lamb) ஆகிய மேல்நாட்டுத் தொல்லியலாளர்களால் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
1970 ஆம் ஆண்டிற்குப் பிறகு பயிற்சி பெற்ற உள்நாட்டுத் தொல்லியலாளர்கள் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (Universiti Kebangsaan Malaysia) மற்றும் மலேசியா பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் துறையுடன் (Department of Museums and Antiquity) இணைந்து.புஜங் பள்ளத்தாக்கில் உள்ள தொல்லியல் களங்களில் அகழ்வாய்வுகள் மற்றும் மறுகட்டுமானங்களை மேற்கொண்டனர். மலேசிய அரசு இந்த ஆய்வுகளுக்குப் பேராதரவும் நிதியும் வழங்கி ஆதரித்தது. புஜாங் பள்ளத்தாக்கில் ஆய்வு மேற்கொண்ட நிக் ஹாசன் ஷுஹாய்மி (Nik Hassan Shuhaimi) மற்றும் நிக் அப்துல் ரஹ்மான் (Nik Abdul Rahman), மலேசிய தேசிய பல்கலைக் கழகம், )Universiti Kebangsaan Malaysia), ஆகியோர் மிக முக்கியமான உள்நாட்டுத் தொல்லியல் நிபுணர்கள் ஆவர். இங்கு நடைபெற்ற ஆய்வுகள் பற்றி இவர்கள் நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர்.
இங்கு கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் இங்கு நிலவிய இந்து பெளத்த ஆட்சி அமைப்பினை (Polity) எடுத்துக் காட்டுகின்றன. இப்பகுதியில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 2000 ஆண்டுகள் பழமையானவை. ஐம்பதிற்கும் மேற்பட்ட சண்டி (Candi) என்று அழைக்கப்படும் பண்டைய பள்ளிப்படைக் கோவில்கள் (ancient tomb temples) அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பெங்காலான் புஜாங், மெர்போக் (Pengkalan Bujang, Merbok) என்னுமிடத்தில் இவை நன்கு பராமரிக்கப்படுவது மட்டுமின்றிக் காண்பவருக்கு மனநிறைவையும் தருகிறது. புஜாங் பள்ளத்தாக்கின் தொல்லியல் அருங்காட்சியகமும் (Bujang Valley Archaeological Museum) இந்த வளாகத்தில் அமைந்துள்ளது சிறப்பு.
சுங்கை பத்து தொல்லியல் தளம் (Sungai Batu Archaeological Site)
முகவரி: கம்புங் பெர்மாத்தாங் சமாக், 08100 பெடோங் (Kampung Permatang Samak, 08100 Bedong). தொலைபேசி: +6019 753 7327, மின்னஞ்சல் [email protected].
அமைவிடம்: 5°41’39″N அட்சரேகை 100°27’5″E தீர்க்கரேகை
சுங்கை பத்து தொல்லியல் வளாகம், கெடா, தென்கிழக்கு ஆசியாவின் ஆரம்பகால நாகரிகம் ஆகும். புஜாங் பள்ளத்தாக்கில் சுமார் 4 சதுர கிமீ பரப்பளவை உள்ளடக்கிய தொல்லியல் வளாகமாகும். இந்த வளாகத்தில் 97 தளங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. இரும்பை உருக்கிய தளங்கள் (iron smelting sites), பண்டைக்காலப் படகுத் துறை (Ancient Jetty), நி��்வாகக் கட்டிடங்கள் *(Administartive Buildings), வழிபாட்டுத் தளம் (Ritual Site) என்று நான்கு விதமான தளங்களை இங்கே காணலாம். வழிகாட்டுதலுடன் கூடிய தொல்லியல்-சுற்றுலாத் தொகுப்புகளைப் (Archaeotourism Packages) பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இத்தொல்லியல் தளத்தில்  மிக சமீபத்திய காலம் வரை அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய மரபுத் துறையுடன் (National Heritage Department) இணைந்து மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்த்தைச் (Universiti Sains Malaysia) சேர்ந்த உலகளாவிய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் (Centre for Global Archaeological Research (CGAR) தொல்பொருள் ஆய்வு இயக்குனர், பேராசிரியர் டத்தோ டாக்டர் மொக்தார் சைடின் (Professor Datuk Dr Mokhtar Saidin) சுங்கை பத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் அகழ்வாய்வினை மேற்கொண்டார். இது தற்காலம் வரை தொடர்ந்தது நடைபெற்று வருகிறது.
ஆய்வு முடிவுகள்: சுங்கை பத்துப் பகுதி 2,000 ஆண்டுகளுக்கு முன்னால்  இரும்பு உருக்கும் தொழில்துறை நகரமாகத் திகழ்ந்துள்ளது. இங்கு பண்டைக்காலத்திய இரும்பு உலைகள் (Iron Furnaces), சுத்திகரிப்பு ஆலைகள் (Refineries) உள்ளிட்ட இரும்பு உருக்கும் களங்கள் (Iron Smelting Sites) கண்டறியப்பட்டுள்ளன. இங்கு சுரங்கங்கள் (Mines), 1600 செல்சியசில் வெப்பத்தில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம், உருக்காலைகள் (Smelting Factories), பெரிய துறைமுகம் என்று காட்டும் 12 படகுத் துறைகள் (Jetties), நிர்வாகக் கட்டிடங்கள் (Administrative Buildings) எல்லாம் கண்டறியப்பட்டுள்ளன.  இது மட்டுமின்றிக் கெடா அரசு அந்தக் காலகட்டத்தில் பெரிய இரும்பு ஏற்றுமதி செய்த அரசாகவும் திகழ்ந்துள்ளது. இது பொருளாதார அடிப்படையிலான நாகரிகம் (Economy based Civilization) சுங்கை பத்தில் இருந்ததை உறுதி செய்துள்ளது. கடஹ என்ற சொல்லுக்கு இரும்பு என்று பொருள் உள்ளது.
கப்பலின் சிதைவுகள் கிடைத்த இடம்
இங்கு 24 மீ. ஆழத்திற்குச் சேறு கலந்த மண்ணை உறிஞ்சி அகற்றிய பின்னர்ப் பண்டைய கப்பல்களின் சிதைவுகள் (Remnants of Ships) கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் துருப்பிடித்த ஆணிகள் மற்றும் இரும்புத் துண்டுகளுடன் கூடிய 8 மீ. நீளம் கொண்ட கப்பல் கொடிக்கம்பம் (Mast) கண்டுபிடிப்புகளில் முக்கியமானது.
இங்கு கண்டறியப்பட்ட ஒரு கல் கட்டிடத்தின் சிதையாத முழுமையான அஸ்திவாரம், விரிவான வடிவியல் துல்லியத்துடன் (geometrical precision) கட்டப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. இங்கு கிடைத்த செங்கற்களை ஆய்வு செய்ததில் இவை கி.பி. 110 ஆம் ஆண்டுக் காலகட்டத்தைச் சேர்ந்ததாகலாம் என்று கால வரையறை செய்யப்பட்டுள்ளது. சதுர வடிவிலான செங்கற்கள் .5.5m x 5.5m துல்லிய அளவுகளில் இருந்தது ஒரு துல்லியமான கட்டுமானத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.
பண்டைக்காலப் படகுத்துறை (Ancient Jetty)
இந்த சுங்கை பத்துத் தளம் கி.மு. 535 ஆம் ஆண்டுக்கும் முந்தையது என்று தொல்லியலாளர்கள் நம்புகின்றனர். இந்த ஆதாரங்கள் போரோபுதூர் (Borobudur of Java) (கி.பி. 8 ஆம் நூற்றாண்டு), அங்கோர்வாட் (Angkorwat of Cambodia) (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு) விடச் சுங்கை பத்து தொல்பொருள் 1,200 முதல் 1,600 ஆண்டுகளுக்குப் பழமை வாய்ந்தன என்பதை நிரூபித்துள்ளன.
டாக்டர் மொக்தார் சைடின் இந்த முக்கியம் வாய்ந்த சமீபத்திய கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும் என்றும் மலாக்காவை விடத் தொன்மைவாய்ந்த கெடாவை உள்நாட்டு வரலாற்றின் தொடக்கப் புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். லெம்பா புஜாங் தன்னார்வலர் ஆய்வுக் குழுவின் (Lembah Bujang Independent Research Group) தலைவரான எஸ்.கோபிகிருஷ்ணன் “இந்த வலுவான சான்றை அரசு ஏற்றுக்கொண்டு புஜாங் சமவெளியின் பண்டைய வரலாற்றைத் திருத்துவதுடன், மலேசிய வரலாறு மலாக்காவுடன் அல்லாமல் கெடாவுடன் தொடங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் கெடாவின் வரலாறு கி.பி. 110 ஆம் ஆண்டளவில் தொடங்குகிறது. ஆனால் மலாக்காவின் வரலாறோ கி.பி. 1400 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்குகிறது.
சுங்கை மாஸ் தொல்லியல் தளம் (Sungai Mas Archaeological Site)
சுங்கை மாஸ் தொல்லியல் தளம் புஜாங் பள்ளத்தாக்கில், கெடாவில் அமைந்துள்ள தொல்லியல் தளமாகும். புஜாங்க் பள்ளத்தாக்கில் பாயும் மூடா ஆற்றின் துணை ஆறான சுங்காய் மாஸ் அருகே இத்தளம் 102.59 ஹெக்டேர் (253.5 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. டெரஸ் (Terrus) ஆறு மற்றும் மெர்போக் (Merbok) ஆகிய ஆறுகளும் பாய்ந்து வளப்படுத்தும் இப்பகுதியில் சுங்கை மாஸ் நாகரிகம் (Sungai Mas Civilization) நிலவியுள்ளது.
சுங்கை மாஸ்ஸில் நவம்பர் 1992 ஆம் ஆண்டு முதல் மே 2002 வரையிலும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுகேஎம் பாங்கி (UKM Bangi), யுஎம் கோலாலம்பூர் (UM Kuala Lumpur), யுஎம்எம் ஸ்குடுய் (UTM Skudai), யு.பி.எம் செர்டாங் (UPM Serdang) ஆகிய உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தொல்லியல் துறைகளும்,  புஜாங் பள்ளத்தாக்கின் அருங்காட்சியகம் (Bujang Valley Archaeological Museum) மற்றும் ஜோகோர் பாரம்பரிய அறக்கட்டளை (Johor Heritage Foundation) ஆகிய அமைப்புகளுடனும் பாலி உதயனா பல்கலைக்கழகம் (Udayana University of Bali), காட்ஜா மாடா பல்கலைக்கழகம், யோக்யகார்ட்டா (Gadjah Mada University of Yogyakarta), கான் சாய் பல்கலைக்கழகம், ஒகோயாமா, ஜப்பான் (Kan Sai University of Okoyama, Japan), சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (National University of Singapore), யார்க் பல்கலைக்கழகம், யு.கே (University of York in the United Kingdom) ஆகிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும் ஒன்றிணைந்து இந்த அகழ்வாய்வை மேற்கொண்டுள்ளனர்.
சமஸ்கிருத மொழியில் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டுகளில் புழங்கிய லிபியில் (பல்லவ லிபி?) பொறிப்புப் பெற்ற பல பலகைக் கற்கள் தெற்கு கெடாவின் மெர்போக் ஆற்றின் கழிமுகத்தில் கிடைத்துள்ளன. இவற்றுள் மூன்றில் பெளத்த விதியான கர்மாவைப் பற்றிய கூற்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்தத் தத்துவம் அடங்கிய கல்வெட்டு இந்தியாவிலோ ஸ்ரீலங்காவிலோ கிடைக்கவில்லை. கர்னல் ஜேம்ஸ் லோ என்ற தொல்பொருள் சேகரிப்பாளர் பெளத்த கர்மா கூற்று பொறித்த ஒரு கல்லை மூடா ஆற்றின் தென்பகுதியில் 1848 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இந்தக் கல்லின் பொறிப்பில் ரக்தமிரிக்கா (Raktamrrika) என்ற இடத்தைச் சேர்ந்த புத்தகுப்தா என்ற கடலோடியைப் பற்றிய குறிப்பும் உள்ளது. இது போல எழுத்துப் பொறிப்பும் ஸ்தூபி உருவமும் பொறித்த பலகைக் கல் சுங்கை மாஸ் பகுதியில் 1979 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. புத்தர்-குப்தா கல் கல்வெட்டு (Buddha-Gupta Stone Inscription), அல்லது பத்து பெர்சரத் புத்தர் குப்தா (Batu Bersurat Buddha Gupta) என இக்கல்வெட்டு இன்று அழைக்கப்படுகிறது. இக்கல்வெட்டின் மூலம் சுங்கை மாஸ், தொல்லியல் களத்தின் காலத்தை அறிய உதவுகிறது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் பீங்கான் (ceramics), ஓடுகள் ( tiles), செங்கற்கள் (bricks), கற்கள் (stones), உலோகம் (metal), மணிகள் (beads), பானைகள் (pots), சமையலறை பொருட்கள் (kitchenware) உள்ளிட்ட 191,506 பதிவு செய்யப்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. சில பீங்கான்கள் சீன நாட்டின் டாங் வம்சம் (Tang Dynasty) (கி.பி 618-906) மற்றும் சுங் வம்ச (Sung Dynasty) (கி.பி. 960-1279) காலத்தைச் சேர்ந்ததாகக் காலவரையறை செய்துள்ளார்கள். இவை சீன நாட்டுடன் நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளன. இங்கு கிடைத்த  நீலம் மற்றும் பச்சை நிற பீங்கான்கள் மேற்கு ஆசியாவைச் சேர்ந்தன என்று அடையாளப்படுதப்பட்டுள்ளன. இவற்றின் காலம் கி.பி. 800 – 1000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகலாம். புஜாங் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதக் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகளை இந்தத் தொல்லியல் தளம் வழங்குகிறது.
பெங்காலான் புஜாங் தொல்லியல் தளம் (Pengkalan Bujang Archaeological Site)
முகவரி: ஜலான் மெபோக், 08400, மெர்பொக், கெடா
சண்டி பெங்காலான் புஜாங்  கி.பி. 10 – 14 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம். இஃது ஒரு நுழைமுகத் துறைமுகம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 1936-1937 ஆண்டுகளில் குவாரிட்ச் வேல்ஸ் (Dr. Quaritch Wales) இந்தக் களத்தைக் கண்டறிந்தார். 1974 ஆம் ஆண்டில் அகழ்வாய்வுப் பணிகள் துவங்கின. அருங்காட்சியகம் மற்றும் தொல்பொருளியல் துறை  (Department of Museum and Antiquities) இந்த அகழ்வாய்வினை மேற்கொண்டது. முக்கிம் புஜாங் (Mukim Bujang) வளாகத்தில், குறிப்பாகத் தளம் 23 இல் புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகமும் மலேசியாவின், கெபங்சான் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து அகழ்வாய்வினை மேற்கொண்டனர். இந்த அகழ்வாய்வில் 3.5 ஹெக்டேர் பரப்பளவில் ஆறு ஸ்தூபிகள் கண்டறியப்பட்டன. இந்த அகழ்வாய்வு பல்வேறு வகையான தொல்பொருட்கள் பற்றிய தகவல்களைப் பெற மேற்கொள்ளப்பட்டது. பெற்ற தகவல்கள் சுங்கை மாஸ் தொல்லியல் அகழ்வாய்வுகளுடன் ஒப்பிடப்பட்டது.
Candi Pengkalan Bujang சண்டி பெங்காலான் புஜாங் 
  தளம் 19
வேல்சஸ் என்பவரால் 1936-37 ஆம் ஆண்டுகளில் இந்தச் செங்கல் சண்டி என்னும் இந்துக் கோவில் கண்டறியப்பட்டது. அதே இடத்தில் 1972 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. மண்டபம் (வெளி மண்டபம்) விமானம் (உள் கருவறை) செங்கல்லால் இணைத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த 19 ஆம் தளத்தில் நிழல் தர கொட்டகை (Shed) அமைக்கப்பட்டுள்ளது.
தலையில்லாத கணேசரின் மகராஜலீலாசனக் கோலத்து  உருவச்சிலை ஒன்று 16 ஆம் தொல்லியல் தளத்தில் கண்டறியப்பட்டது. தற்போது இது புஜாங் பள்ளத்தாக்கு தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தளம் 23
தளம் 23 மற்றும் தளம் 23 ஆகிய இரண்டும் அருகருகே அமைந்துள்ளன. இங்கு இளம்பச்சை பீங்கான் துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்புநூற்பட்டி 
இந்தோனேஷியா விக்கிபீடியா
கல்வெட்டுகளில் உள்ள ஆட்சியாண்டு வரிசைப்படி முதலாம் இராஜேந்திரன் வென்ற நாடுகள். முனைவர்.இல.தியாகராஜன். பக். 53. In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017 சான்று  திருவல்லம் கல்வெட்டு 228/ 1921
பரமேசுவரா விக்கிபீடியா
பூஜாங் பள்ளத்தாக்கு இந்து – புத்த ஆலயங்கள் – யூனேஸ்கோ பாரம்பரியத் தலங்களாக பரிந்துரைக்கப்படாதா? மலேசியன்டைம்ஸ் மே 23, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இராஜேந்திரசோழனின் படையெடுப்புகளும் அதன் தாக்கமும். பெ.இராமலிங்கம். பக். 420 – 421 In கங்கைகொண்ட இராஜேந்திரசோழன்: அரியணை ஆண்டுவிழா கருத்தரங்கக் கட்டுரைகள். கங்கைகொண்டசோழபுரம் மேம்பட்டு குழுமம், கங்கைகொண்டசோழபுரம். ஜனவரி 2017
ஸ்ரீ விஜய பேரரசு http://ksmuthukrishnan.blogspot.com/2016/05/blog-post_11.html
Ancient seaport of Sg Batu Putri Zanina New Straits Times 3 February 2019. https://www.nst.com.my/news/2016/05/147317/ancient-seaport-sg-batu
Archaeologists search for a king in Sungai Batu Opalyn Mok, Malay Mail, June 09 2017 https://www.malaymail.com/news/malaysia/2017/06/09/archaeologists-search-for-a-king-in-sungai-batu/1395663
Bujang Valley Archaeological Sites https://www.timothytye.com/malaysia/kedah/bujang-valley.htm
Bujang Valley is Our National Heritage Muthiah Alagappa https://carnegieendowment.org/2014/03/31/bujang-valley-is-our-national-heritage-pub-55215
Bujang Valley Wikipedia
History of Bujang Valley ( Lembah Bujang) https://sites.google.com/site/ashweenaresearch/history-of-bujang-valley-lembah-bujang
Kadaram or Bhujanga http://veda.wikidot.com/info:kadaram
Srivijaya Wikipedia
yogi கடாரம் ராஜேந்திர சோழனுடையதா? 4 http://yogiperiyasamy.blogspot.com/2014/10/blog-post_19.html
youtube
youtube
youtube
youtube
  கடாரம் 1: சோழர் நிலைநாட்டிய கடல் வணிக மேலாதிக்கம், அகழ்வாய்வுகள் மெய்பிக்கும் கெடா துவா நாகரிகம் பண்டைத் தமிழ் வணிகர்கள் தொடக்கத்தில் மரக்கலங்களில் இந்தோனேசிய தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் சென்று கடல்சார் வணிகம் மேற்கொண்டனர். அரேபியர்கள் வாசனைப் பொருட்களைத் தமிழர்களிடமிருந்து பெற்று மேற்க���லக நாடுகளுக்குக் கொண்டு சென்றனர்.
0 notes